யாழில் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்ட சமவுரிமை இயக்கத்தினர் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்
இன்றுகாலை யாழ்.பேருந்து நிலையத்தில் அரசிற்கு எதிராக பல்வேறு கோசங்களை பதாதைகளில் எழுதி அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இவ்வாறு கையெழுத்துக்கள் பெற்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீச்சப்பட்டுள்ளது.
யாழ். பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுமாறும், கடத்தல், காணாமல் போவதை நிறுத்துமாறும், நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனைக் குழப்பும் வகையில் புலனாய்வாளர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பயணித்த வாகனத்தின் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு-
சமவுரிமை இயக்கதின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.நகரில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்திற்கு படையினரும், படைத்துறைப் புலனாய்வாளர்களும் கடுமையான அச்சுறுத்தல்களை கொடுத்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள் மீது கழிவு ஒயிலை ஊற்றியும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், கடத்தல், கைதுகள், உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வடகிழக்கிலுள்ள இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக தெற்கிலிருந்து வந்திருந்த சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் மூம்மொழிகளிலும் எழுதிய பதாகைகளில் மக்களிடம் கையெழுத்துப் பெற்றனர். இந்நிலையில் போராட்டத்தை குழுப்பும் வகையில் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் போராட்டக்காரர்களை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதனோடு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த தினக்குரல், உதயன், வலம்புரி பத்திரிகைகளின் செய்தியாளர்களை இலக்கு வைத்து கழிவு ஒயில்களையும் ஊற்றியிருக்கின்றனர். இதில் அவர்கள் எந்த ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.
இந்நிலையில் கடுமையான அழுத்தங்கள், அச்சுறுத்தல்களையும் தாண்டி சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல் ஊடகவியலாளர்கள் மீது கழிவு ஒயிலை ஊற்றிய படைப்புலனாய்வாளர்கள் கடற்படையின் வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றிருக்கின்றனர்.









