மஹவ -பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் திசாநாயக்க என்ற பெயருடை வர்த்தகரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரக்கன், விதை வகைகள், பலாப்பழ உற்பத்திகள் என்பவற்றை உபயோகித்து அவர், பிஸ்கட், கேக் உள்ளிட்ட பல உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 8 ம் திகதி இடம்பெற்ற வடமேல் மாகாண வர்த்தகர்களுக்கு இடையிலான விருது வழங்கல் நிகழ்வின் போது, சில மூலிகை பொருட்களை பயன்படுத்தி நீரிழிவு நோயாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள பிஸ்கட்டை உற்பத்தி செய்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமது உற்பத்திகள் மிக துரிதமாக மக்களிடத்தில் பிரபல்யம் அடைந்தமையையிட்டு சில தரப்பினர் இவ்வாறான உற்பத்திகளை நிறுத்துமாறு தமது கணவருக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வந்ததாக காணாமல் போன வர்த்தகரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அவர் குருநாகலை வர்த்தக தொழில்துறையினரின் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று காலை 9.30 க்கு மஹவ நகரத்திலிருந்து குருணாகலை நோக்கி சென்ற பஸ்ஸில் ஏறிய அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை.
இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடியிடம் வினவியபோது, காணாமல் போயுள்ள வர்த்தகர் தொடர்பில் மஹவ மற்றும் குருணாகலை பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.