முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்க ஆளும்கட்சி குழுவொன்று முயற்சி: ஹக்கீம்
பிரித்தானியாவிருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது முஸ்லிம்கள் அன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அதுபோன்றே 30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னரான இன்றும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை முஸ்லிம் மகளிர் கல்வி சங்கத்தில் இடம்பெற்ற மறைந்த கலாநிதி டி.பி.ஜாயாவின் 123ஆவது நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேருரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
1915ம் ஆண்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்டு கம்பளையில் சிங்கள – முஸ்லிம் கலகம் தூண்டப்பட்டது. அதே போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாக கொண்டே கலகத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.
இந்த தீய நோக்கம் ஹலால் சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை போன்ற பல கோணங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது.
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை சர்ச்சை மற்றும் ஹலால் சான்றிதழ் பிரச்சினைகள் வர்த்தகத்தின் பின்னணியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் என்ற வகையில் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளேன்.
இந்த உரைக்கு தேவையான சகல தரவுகளையும் தற்போது சேகரித்துக்கொண்டிக்கின்றேன்.
அதற்காக பயமில்லாமல் இந்த சர்ச்சைகளின் அடிப்படைகளை தெளிவுபடுத்த வேண்டும். இதனை ஒருபோதும் தனியாக மேற்கொள்ளக் கூடாது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராடுவதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.
பெரும்பான்மை சமூகத்தில் சிறுப்பான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்கள் உள்ளனர். இவர்களுடன் நாம் இணைந்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்திலுள்ள சிறிய ஒரு குழுவினரே இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இனவாத முலாம் பூசுகின்றனர்.
இந்த இனவாத சக்திகளுக்கு எதிராக கலாநிதி டி.பி.ஜாயா காட்டிய வழியில் பெரும்பான்மை சமூகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றார்.